டெல்லிக்கு புதிய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நியமனம்!

டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு வந்தவர் அனில் பைஜால். 1969 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பைஜால் 2016-ம் ஆண்டு முதல் டெல்லி துணைநிலை கவர்னராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், 76 வயதான பைஜால் கடந்த 18-ம் தேதி டெல்லி துணைநிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. பைஜாலின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியின் புதிய துணைநிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். புதிய துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள வினய் குமார் மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழில்துறை ஆணையம் தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.