தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர்: அண்ணாமலை

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையை, 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ”அண்ணாமலை, சொந்த ஊரை தாண்ட முடியாது,” என, எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, அண்ணாமலை கூறியதாவது:-

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல உதாரணம். அமைச்சர் போலவா பேசுகிறார்? கரூரை தாண்ட விட மாட்டாராம். இவர் என்ன, ‘பேரி கார்டு’ போட்டு தடுக்கும், ‘செக்யூரிட்டி’ வேலை பார்க்கிறாரா? இவர்களை போல, கச்சத்தீவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், தமிழகத்துக்கான உரிமையை விட்டு கொடுத்து விட்டு, மக்களை ஏமாற்றி நாடகம் போடும் நபர், அண்ணாமலை கிடையாது என்பதையும், அமைச்சர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்களோ, ரவுடிகளோ, நெஞ்சில் துணிவு இருந்தால், கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும்; அதன்பின், என்ன நடக்கிறது என்பது தெரியும்! தமிழகத்தில் தற்போது இருப்பது, பழைய பா.ஜ., என்ற நினைப்பில் அமைச்சர் பேசி இருந்தால், அதை உடனே மாற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.