உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு கொண்டு வர உண்மையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் இன்னும் ரஷ்யாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது தான் போர் 100 நாட்களை தாண்டியும் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுகிறது. போரை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
குறிப்பாக வார்ட்டிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இன்று உரையாற்றிய அவர், உக்ரைனுக்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்து செல்லாதீர்கள் என கேட்டுக்கொண்ட போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் போருக்கான தீர்வை எட்டுவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
