தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருவதால் நாடு முழுதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், சமீபத்தில் கன மழை பெய்தது. தலைநகர் சியோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் 14 பேர் உயிரிழந்தனர். கன மழை பெய்து சில வாரங்களே ஆன நிலையில், தென் கொரிய கடற்கரை பகுதியில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால், நாடு முழுதும் கன மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசி வருகிறது.

இந்தப் புயல், ஜெஜு தீவு நகருக்கும், புசான் நகருக்கும் இடையே இன்று கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 290 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புசான் நகரை சுற்றி 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், நேற்று இரவு முழுதும் தன் அலுவலகத்திலேயே தங்கி இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்தார்.

புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக தென்கொரியாவின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.