இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாள் துக்கம் அனுசரிப்பு!

இங்கிலாந்து வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்து ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் ராணி எலிசபெத். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து இங்கிலாந்து அரண்மனையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்த எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி(Elizabeth Alexandra Mary) தனது தந்தை ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் மன்னரான போது தனது 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனவர். 1952-ல் தந்தை மறைவுக்கு பிறகு இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் இங்கிலாந்தை சிறப்பாக ஆட்சி செய்தார்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட எலிசபெத்துக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் (வயது 73) இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மூன்றாவது சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். கடந்தாண்டு எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைந்த நிலையில், தற்போது ராணி எலிசபெத் மறைவால் பக்கிங்காம் அரண்மனை குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து இங்கிலாந்து அரண்மனையில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் உடல் பக்கிங்காம் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு 10-வது நாளில் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ராணி எலிசபெத் நம் காலத்தின் உறுதியானவராக நினைவுக்கூரப்படுவார். தன்னுடைய நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கிய சிறப்புக்குரியவர். பொதுவாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்து வாழ்ந்தவர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “காலநிலை பிரச்னை, பின்தங்கிய நாடுகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் மீது தொடர் கவனம் செலுத்தி அதற்கான பங்களிப்பை சிறப்பாக செய்தவர் எலிசபெத்” என்று பாராட்டியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தன்னையும் மனைவி மிச்சல் ஒபாமாவையும் மிகுந்த அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் எலிசபெத் ராணி. அவருடன் செலவிட்ட நேரத்தை மறக்கவே முடியாது” என்று தனது நினைவை பகிர்ந்துள்ளார். அதேபோல் ராணி எலிசபெத் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.