எலான் மஸ்கின் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் பங்குதாரர்கள் ஆதரவு!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தை எலான் மஸ்கின் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்த நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததை அடுத்து டுவிட்டர் நிர்வாக குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் உறுதியானதாக தகவல்கள் வெளிவந்தன. எனினும், டுவிட்டர் உடனான தன்னுடைய ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் ஜூலை மாதம் அறிவித்தார். இதற்கு காரணம் டுவிட்டர் கூறுவதை விட நன்கு மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும் தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக டுவிட்டர் இருப்பதாக கூறிய மஸ்க் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
இதனால், பங்குச்சந்தையில் டுவிட்டர் நிறுவன பங்குகள் 7 விழுக்காடு அளவிற்கு சரிந்து விட்டது. அதேநேரம் ஒப்பந்தத்தை மஸ்க் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என கூறிய டுவிட்டர் தங்கள் நிறுவன பங்குதாரர்கள் முடிவின் படி செயலாற்ற போவதாக அறிவித்திருந்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது.

இதற்கிடையே டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக டுவிட்டரின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது. சான் பிரான்ஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவன தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பின் மூலமாக எலான் மஸ்கின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எனினும், வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலமே தீர்வு எட்டப்படலாம் என தெரிகிறது.