மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை: தர்மேந்திர பிரதான்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்திற்கு வந்த அமைச்சர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுராமன் உள்ளிட்ட பல்கலைக் கழக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயத்தில் அமைச்சர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தின் பார்வையிட்டனர். அமைச்சர்களுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அமைச்சர்களுக்கு விளக்கிக் கூறினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் 274 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டங்களை வழங்கிய பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மின்னணு பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் 2023 ஆம் ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும் என்றும் நமது நாடு பழமையான கலாச்சாரத்தையும் மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரிதும் உதவிகரமாக இருந்ததாகவும் அவர் பேசினார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தாய்மொழியில் பயிலும்போது சிரமமான பாடங்களையும் எளிதாக கற்க முடியும் என்றும், மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நபர்களுக்காவது வேலை தரும் வண்ணம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.