இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

இலங்கையில் சீன ராணுவ நடமாட்டம் உள்ளதாக பரபரப்பு ஏற்பட்ட சூழலில், இலங்கையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:-

இலங்கையில் சீன ராணுவத்தினர் இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது. சீன ராணுவத்தினர் பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் உள்ளதாகவும், இதனால் இந்தியா தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. உண்மையில் பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் தொடர்பு இல்லை. அரியாலை கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்திற்கு சீனர்கள் வந்திருந்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. சீனர்கள் வேறு யாரும் வடக்கில் கடல் அட்டை செயல்பாடுகளில் கூட ஈடுபடவில்லை.

மேலும், இந்தியாவும் சரி சீனாவும் சரி கடல் அட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி கடல்அட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளேன். இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம் என்னை பொறுத்தவரை இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.