அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவிக்க வேண்டும்: நளினி

பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம், பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்தில் நான் இல்லை என நளினி மனம் திறந்து பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடந்து நேற்று நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள நளினி மற்றும் அவரது வழக்கறிஞரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நளினி கூறியதாவது:-

மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கும் நன்றி. சிறையில் இருந்தாலும் என் குடும்பத்தினரின் நினைவில்தான் வாழ்ந்தேன். இந்த வழக்கில் கைதான அன்றிலிருந்து வெளியில் வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. விரைவில் சிறையிலிருந்து வெளியே செல்வோம் என்று எண்ணிய நேரத்தில் தூக்கு தண்டனை என்ற தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டுமென பல முறை நினைத்ததுண்டு. முதல்வர் சந்திக்க நினைத்தால் நிச்சயம் அவரை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவிப்போம்.

பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார். சம்பவ இடத்திற்கு சென்றதாக மட்டுமே என் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன். மருத்துவர்கள் பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பின்பே சிறையின் கதவை திறந்தனர். அதுவரையில் கைது செய்யப்பட்ட நாள் அன்றிலிருந்தே 24 மணி நேரமும் சிறையின் கதவை திறக்கவில்லை. பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம், பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்தில் நான் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்று தந்தது. சிறையிலிருந்து வெளிவர மேலும் சிறிது காலம் ஆகும் என்ற நினைத்த நேரத்தில் வெளியே வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கணவர் தெரிவித்தார். சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை,. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடனே 6 ஆண்டு உயர்கல்வி படித்து முடித்தேன். கணவரை சேர்க்க வேண்டும் சிறையில் இருந்தபோது தையல், ஓவியம்,சேலை டிசைன்,கைவினை பொருட்கள் செய்வது,போன்ற பல சுய தொழில்களை கற்று கொண்டேன். ஒரு மாத காலம் சிறை விடுப்பு ( பரோல் ) வழங்கிய முதல்வருக்கு நன்றி. மேலும் கணவரை மீட்டெடுக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும். அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவித்து, என் மகளுடன் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.