எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அப்போது எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின், ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். பல்லவன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றன. எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம். எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும். மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை, வெள்ளப் பாதிப்பை நாளை ஆய்வு செய்ய உள்ளேன். அதிக கனமழை பெய்த சீர்காழியில் நாளை ஆய்வு செய்ய உள்ளேன். இன்று இரவு புறப்பட்டு சென்று, மயிலாடுதுறை, சீர்காழி, கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.