காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத் மக்களிடம் முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 4-5 இடங்களை மட்டுமே பெறும். குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இம்முறை காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழக்கிறது.

பாஜகவின் முக்கிய சவாலா ஆம் ஆத்மி தன்னை முன்னிறுத்தும். ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 178 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முற்றிலும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரசின் வாக்குகள் 13 சதவீதத்திற்கும் கீழே குறைந்து 4-5 இடங்களைப் பெறும் என்பது எனது கணிப்பு. இது ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான நேரடிப் போட்டி. காங்கிரசுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். மாநிலத்தில் இரண்டு வகையான வாக்காளர்கள் இருகின்றனர். ஒன்று பாஜகவை வெறுத்தவர், மற்றொருவர் ஆம் ஆத்மியை விரும்புபவர். இந்தமுறை காங்கிரசின் வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு மாறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.