இஸ்தான்புல்லில் பாலியல் வழக்கில் இஸ்லாம் போதகருக்கு 8,658 ஆண்டு சிறை!

இஸ்தான்புல்லில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக இஸ்லாம் மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66). இவர் அந்நாட்டில் உள்ள இஸ்தான்புல்லில் செயல்படும் ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நிகழ்ச்சியின்போது தன்னைச்சுற்றி மேக்அப் போட்டப்படி குறைந்த ஆடைகள் அணிந்த பெண்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் மத பிரசாரங்களை வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அக்தார் மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மோசடி மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தது உள்ளிட்ட பல புகார்கள் அவர் மீது எழுப்பப்பட்டது.

இதற்காக அவருக்கு கடந்த ஆண்டு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மறு விசாரணை செய்த உயர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்தாருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேருக்கும் இதே அளவு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.