அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தங்களையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்ற நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓபிஎஸ் அதிமுகவை உரிமை கொண்டாடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் கட்சி நடவடிக்கையை மீறி செயல்பட்டார். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவே இறுதியானது.

சனிக்கிழமை இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் இன்று விசாரணை தொடங்கியது. எனவே ஓபிஎஸ் தரப்பு தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூறினர். நியாயமான கோரிக்கை என்று உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், தங்களுக்கு உள்ள ஆதரவு குறித்தும் கூறினர். இதை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதற்குள் அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.