கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆா் சா்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவா் இறந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளியின் உடைமைகளைச் சூறையாடி, தீயிட்டு எரித்தனா். இதைத் தொடா்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த விசாரணையில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளைத் தொடங்க பள்ளி நிா்வாகத்துக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்றைய விசாரணையில், எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை முழுமையாக பள்ளியைத் திறக்க அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்து பள்ளி நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது. அதுபோல, மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையிலும் தமிழக அரசின் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.