கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை!

மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினையானது கடந்த 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. பெலகாவியில் உள்ள சுமார் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், கர்நாடகா அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 1957 ஆண்டு ஜூன் மாதம் பெலகாவியை மறுசீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. குழு அமைக்கப்பட்ட போதிலும், இரு மாநிலங்களுக்கும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இப்போது இந்த எல்லை பிரச்சினை வலுவாக வெடித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதால் கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார்.

இதை கடுமையாக கண்டித்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அதுபோன்ற எந்த தீர்மானமும் இயற்றப்படவில்லை. மகாராஷ்டிராவில் எந்த கிராமமும் கர்நாடகாவுக்குச் செல்லாது. பெல்காம்-கார்வார்-நிபானி உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களைப் பெற உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வலுவாகப் போராடும்” என்று கூறினார்.

அதற்கு எதிர்வினையாற்றி ட்வீட் போட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “பெலகாவி எல்லை விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மக்களை தூண்டி விடும் வகையில் பேசியுள்ளார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. மராட்டியதுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். நீர், நிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

மராட்டியத்தின் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம். இரு மநில எல்லையில் பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. தற்போது வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மராட்டியத்தின் ஒரு கிராமம் கூட கர்நாடகாவுக்கு செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.