திமுகவில் இணையும் பாஜக முக்கியப் புள்ளி வானதி சீனிவாசன்?

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் பதவி வகித்து வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வெற்றி கொண்டவர் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் வானதி சீனிவாசன், பாஜக தேசிய மகளிரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தும் வருகிறார். இப்படி கட்சியில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வரும் அவர், எதிர் முகாமான திமுகவில் விரைவில் சேர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கட்சி தலைமை தம்மை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், சமீபகாலமாக கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் வானதி சீனிவாசன் வருந்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியே பாஜகவில் இருந்தால் தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் அவர் எண்ணுவதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் அவர் தமது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் எனவும், அதன் பின்னர் கூடிய விரைவில் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. வானதி சீனிவாசனை திமுக பக்கம் இழுக்கும் டீலை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி வருவதாகவும், இந்த டீல் ஓகேவானால் வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிச்சயம் இடம் அளிக்கப்படும் என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றும் சவுக்கு சங்கர் தமது டுவிட்டர் பதிவில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகத்தின் தலைவர் பதவியில் இருந்து தமது கணவர் சு.சீனிவாசன் அண்மையில் நீக்கப்பட்டதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதும் வானதி சீனிவாசன் கோபத்தில் இருக்கிறார்’ என்றும் சவுக்கு சங்கரின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், வானதி சீனிவாசனை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை திமுக மேற்கொண்டிருக்கலாம், அல்லது கட்சியின் மற்றொரு சீனியரான இவரது கதையை முடிக்க, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கிளப்பி விட்டிருக்கும் வதந்தியாகவும் இது இருக்கலாம் என்று சமீபத்தில் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட, பிரபல நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.