அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்: திருநாவுக்கரசர்

தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மத்திய அரசின் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டங்களின் நிலை குறித்தும் மத்திய அரசின் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பது குறித்து திருநாவுக்கரசர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்டத்தில் அனைத்து துறைகளின் கீழ் இயங்கி வரும் திட்டங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இறையூர் கிராமத்தில் நீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் மிகவும் துரதிஷ்டவசமானது. தற்போது அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை நானும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கேட்டறிந்தோம். இருப்பினும், குடிநீர் தொட்டியில் கழிவுகளை கலந்த நபர்களை காவல் துறையினர் விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை இதுபோன்ற சாதிய மோதல்கள் எங்கேயும் கிடையாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாதிக்கட்சித் தலைவராக இருப்பதை விடுத்து அனைவருக்கும் பொதுவான தலைவராக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதனை நான் அவரிடமே தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பளிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம். அவரது பேச்சும், கருத்தும் அப்படி தான் உள்ளது. அதிமுகவை பாஜக ஏதோ செய்ய நினைக்கிறது. ஆனால் அதிமுக பிரச்சினைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னரே தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். தனி தமிழ்நாடு கோரிக்கை என்பது தற்போது தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் எழுப்பவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா எழுப்பினார். அதன் பின்னர் அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் எந்த கட்சித் தலைவரும் தனி தமிழ்நாடு என்று கோரிக்கையை எழுப்பவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் மக்கள் ஐடி குறித்த கேள்விக்கு, ஆதார் கார்டை போன்று தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தனி கார்டு ஒன்றை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலமாக மக்களுக்கு நன்மை ஏற்படும் அல்லது அரசின் நலத்திட்டங்கள் விரைவில் கிடைக்கும் என்றால் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.