இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தாலிபன்கள் கண்டனம்!

பிரின்ஸ் ஹாரி 25 ஆப்கானியர்களை கொன்றது குறித்து தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஏற்கனவே திருமணமான, ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த கலப்பின பெண்ணை ஹாரி திருமணம் செய்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தனது காதலில் விடாப்படியாக இருந்த ஹாரி அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு மேகனை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, ஹாரி-மேகன் தம்பதி பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதாகவும், அரச பதவிகளைத் துறப்பதாகவும் கடந்த 2020ஆம் ஆண்டு அறிவித்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது வசித்து வரும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடைசியாக, இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து வந்து சென்றனர்.

இந்த பின்னணியில், இளவரசர் ஹாரி ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் தமது சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகிற 10ஆம் தேதி 16 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாரி அரச வாழ்க்கையிலிருந்து விலகியது ஏன்? எதற்காக அமெரிக்கா சென்றார்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புத்தக வெளியீட்டுக்கு இரண்டு நாள் முன்பு (ஜனவரி 8ஆம் தேதி) ஒளிபரப்பாகவிருக்கும் தொலைக்காட்சிப் பேட்டியின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. அதில், “அப்பாவும் சகோதரரும் தமக்கு மீண்டும் வேண்டும். இது போன்று நடந்திருக்க வேண்டியதில்லை” என்று இளவரசர் ஹாரி கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மேகனை திருமணம் செய்யும் விவகாரத்தில் தமது சகோதரர் வில்லியம்ஸ் தனது கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதாக தி கார்டியன் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டது. “மேகன் மார்கெலை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தபோது, அதுதொடர்பாக எனக்கும், எனது சகோதரர் வில்லியமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர் எனது சட்டை காலரை பிடித்து, எனது கழுத்தில் இருந்த நெக்லசை பிய்த்து எறிந்தார். என்னை தரையிலும் தள்ளினார். இது அனைத்தும் மிக வேகமாக நடந்தேறியது” என அந்த புத்தகத்தில் ஹாரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அரச குடும்பத்தில் இருந்தபோது, அரசு சேவைக்காக ஆப்கானிஸ்தான் சென்றபோது ஹாரி 25 பேரை கொன்றதாக அந்த சுயசரிதையில் ஹாரி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்வினை ஆற்றிய தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி கூறியதாவது:-

25 ஆப்கானிஸ்தானியர்களை கொன்றதாக நீங்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது, வருத்தப்பட வேண்டியது. அவர்கள் ஒன்றும் செஸ் ஆட்டத்தில் உள்ள துண்டுகள் அல்ல. அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு குடும்பம் உள்ளது. கொல்லப்பட்டவர்களின் வருகைக்காக குடும்பங்கள் காத்து கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானியர்களைக் கொன்றவர்களில், தங்கள் மனசாட்சியை வெளிப்படுத்தவும், தங்கள் போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளவும் பலருக்கு உங்கள் கண்ணியம் இல்லை.

நீங்கள் சொன்னதுதான் உண்மை; உங்கள் ராணுவ வீரர்கள், ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எங்கள் அப்பாவி மக்கள் சதுரங்கக் காய்களாக இருந்தனர். இருப்பினும், வெள்ளை மற்றும் கருப்பு “சதுரத்தின்” அந்த “விளையாட்டில்” நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த படுகொலைகள் குறித்து சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காது. ஏனெனில் அவர்களின் காது செவிடாகவும், வாய் ஊமையாகவும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.