திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளாதது வருத்தம்: பாரதிராஜா!

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம் என பாராட்டிப் பேசியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பியின் 60வது பிறந்த நாள் மணிவிழாவாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை முன்னெடுத்த இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பாரதிராஜா பேசியதாவது:-

நான் பொதுவாக அரசியல் மேடையில் பங்கேற்பது இல்லை. ஆனால் இந்த மேடைக்கு வந்திருக்க காரணம் நான் திருமாவை அதிகமாக நேசிக்கின்ற காரணத்தினால் தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்து வந்திருக்கிறேன். யார் மனதையும் புண்படாத வகையில் பேசக்கூடிய ஒரு நல்ல அரசியல்வாதி திருமாவளவன். திருமா முகத்திற்கு அழகு அவர் கொண்டுள்ள கம்பீரமான மீசை தான். அவருடைய சிரிப்பு என்பது கூடுதல் அழகு. எனக்கு சோர்வு வரும்போதெல்லாம் திருமாவளவனின் மீசையை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். கம்பீரமும் துணிச்சலும் கொண்ட மீசை மனிதன். மரியாதையின் உச்சமாக அவரை பார்க்கிறேன். இந்தப் பிள்ளை தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணம் காரணமாக அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம்.

நான் சிறுவயதிலிருந்து கை சுத்தமான அரசியல்வாதிகளை நேசிப்பதுண்டு. நான் பார்த்த வகையில் கை சுத்தமுள்ள அரசியல்வாதி திருமாவளவன். காமராஜர், கக்கன், ஜீவா போன்று சுத்தமானவர். ஆனால் வாழத்தெரியாதவர். பிரபாகரனுக்கு பிறகு நான் ரசித்த தலைவன் திருமாவளவன். பிரபாகரனுக்குப் பிறகு ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் திருமாவளவன். அரசியலில் நாணயத்தைக் காப்பது கஷ்டம். ஆனால் அவர் காப்பாற்றுகிறார். திருமாவின் கைப்பிடித்தாலே ஒரு சுகம் தான். ஐ லைக் யூ திருமா!

சிம்மக்குரலோன் சிவாஜி என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி கர்ஜிக்கும் பேச்சாளர் திருமாவளவன். நீங்கள் எல்லாம் சனாதனத்தை வார்த்தைகளால் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் திருமா அதனை கொள்கை ரீதியாக எதிர்த்துக்கொண்டு களத்தில் இருக்கின்றார். சனாதனம் வேரோடு கிள்ளி எறியப்பட வேண்டும். நம் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். திருமாவின் முதல் பேச்சை கேட்கும் போதே அதிர்ந்து போனேன். யார் இவர் என்று அப்போதே தேட தொடங்கினேன். எங்களைப் போன்றவர்கள் எல்லாம் சிலவற்றை வெளிப்படையாக பேச முடியாது. நாங்கள் நினைப்பதை எல்லாம் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு 83 வயதாகிறது. என் வயதைத் தாண்டி திருமா நூறாண்டுகள் அரசியலில் நிலைத்து நின்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.