ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி: எச்.ராஜா

நான் ஏற்கனவே “ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி” என போன வருடமே சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் நிரூபித்து வருகிறார் என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கூறியுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே தான் கூறியதை தற்போது மீண்டும் அழுத்தி சொல்லி இருக்கிறார் எச். ராஜா. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

சட்டசபையில் இன்று(நேற்று) ஆளுநர் உரையின் போது அவர் மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் பேசியது மரபு அல்ல. இந்த மாதிரி ஏற்கத்தகாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பதும் புதிதான ஒன்று அல்ல. ஏற்கனவே கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதே மாதிரி ஆளுநர்கள் பேசியுள்ளனர். ஆளுநர் அவர்கள் கரெப்ட் அரசாங்கத்தை பற்றி தனது பேச்சில் கூறாமல் தவிர்த்து விட்டு சென்றதற்கு முதலமைச்சரே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவ்வையார் பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் வாசித்தது சபையின் அவை குறிப்பில் இருக்காது என்கிறார்கள் இதுதான் திராவிட மாடல் அமைதி பூங்காவா.

நான் ஏற்கனவே “ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி” என போன வருடமே சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். தமிழ்நாட்டின் ஸ்டாலின் முதிர்வில்லாத முதலமைச்சர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார். தன்னைத் திருத்திக் கொள்வார் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.