பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவுபெறுகிறது.

இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், “17-வது மக்களவையின் 11-வது தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடையும். இதைத் தொடர்ந்து, மார்ச் 13-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடும். பாராளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியில் வரும் 31-ந் தேதி மாநிலங்களவை கூடுவதற்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலங்களவையின் அலுவல் நடவடிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதி நிறைவுபெறுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

நானும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எனவே, அவர்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எனக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும்.

100 பொலிவுரு நகரங்களையும், 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. 2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்று பிரச்சினைக்கு நடுவில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.