கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனப் பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார். இருப்பினும் வரும் 2024 மக்களவை தேர்தல் நிலைப்பாடு பற்றி தற்போதே தெரிவிக்க முடியாது என்று மழுப்பிவிட்டார்.

காங்கிரஸிற்கு கமலின் ஆதரவு பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ஏற்கனவே கமலை திமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இவர் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவிற்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்துவிட்டன. திமுக ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. ஏதாவது செய்திருந்தால் தானே மக்கள் மத்தியில் எடுபடும். அதேசமயம் அதிமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகள் நிச்சயம் மக்களை சிந்திக்க வைக்கும். எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் சரி. மக்களின் எழுச்சி, புரட்சி முன்பு எல்லாமே தவிடு பொடியாகி விடும். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.

திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வராக கருணாநிதி தான் இருந்தார். அப்போது கழக தலைவராக எம்.ஜி.ஆர் தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற்றார். அப்போது திமுக தோற்கவில்லையா? ஜெயலலிதா கட்சி தலைமை பொறுப்பு வகித்த போது மருங்காபுரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அப்போதும் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோற்றது. அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து உட்கட்சி பூசலால் தவித்து கொண்டிருப்பதாக தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அது ஒரு மாயை. உண்மை கிடையாது. கள நிலவரம் என்னவென்றால் அதிமுக ஒன்றுபட்டு எங்கள் பக்கம் நிற்கிறது. திமுகவை வென்று காட்டுவோம் என்பது தான். கமல் ஹாசனை பொறுத்தவரை திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தான் வருவார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.