தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தே புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக நாளை ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்தநிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறுவதும், தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா,பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேச தவிர்த்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி பதிலடி கொடுத்தார். இதனையடுத்து ஆன்லைன் மசோதா மீது தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு ஒப்படைத்த நிலையில் அதற்கு எந்தவித அனுமதியும் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை விடுதலை சிறுத்தைகள் புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திருமாவளவன் தமிழ்நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் தற்போதைய ஆளுநர் அவர்களை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளதோடு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.

தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.