கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின்!

ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. அதேபோல் குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையில் கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார். சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக நிர்வாகிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கைகொடுத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளார். அதேபோல் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்து அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது, அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகொடுத்து வந்த போது, அதே வரிசையில் அண்ணாமலையும் இருந்தார். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலையும் கைகொடுத்தார். இந்த ஆளுநர் மாளிகை விருந்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த தேநீர் விருந்தில் அரசியல் தலைவர்களைத் தாண்டி சில முக்கிய நபர்களும் கலந்து கொண்டு இருந்தனர். அதன்படி இந்த தேநீர் விருந்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்றார். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆளுநர் ரவியுடன் சில நொடிகள் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து அருகே இருந்த அவரது மனைவியுடனும் பேசினார்.