மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் உதயநிதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 88 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டை மேட்டில் 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குதல், 351.11 கோடி ரூபாய் மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.23.70 கோடி மதிப்பிலான 60 முடிவற்ற பணிகளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். அதன்பின் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:-

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்போது மாநாடு போன்று நடந்து கொண்டிருக்கிறது, கடுமையாக உழைக்க கூடிய மக்கள் நாமக்கல் மக்கள். பல்வேறு தொழில்களால் ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வரிகளை கட்டும் மக்கள் நாமக்கல் மக்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது, அதன்படி தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் 216 கோடி பேர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 1,86,706 பயனாளிகள் மக்களை தேடி மருத்துவத்தில் பயனடைந்துள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 1.25 இலட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 88 கோடி ரூபாய் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் உழைப்பால் உயர்ந்து சுற்றுலா துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார். அவரது உழைப்பிற்காக தற்போது அவருக்கு வனத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையும் அவர் செம்மையாக செய்து வருகிறார்.

இது அனைவருக்குமான அரசு. திராவிட மாடல் அரசு. மக்களுக்காக உழைக்கின்ற அரசு. 18 மாதத்தில் பல்வேறு சாதனைகளை திராவிட மாடல் முதல்வர் கொண்டு வந்துள்ளார். கலைஞர் பேரன், இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வரின் மகன் என பல்வேறு பெருமைகள் எனக்கு இருந்தாலும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.