எரிசக்தி துறையில் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது என பிரதமர் மோடி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதனால், மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மத்திய – மாநில திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர் மோடி மாதவரா அருகில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வார விழாவை, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

பெங்களூரு தொழில்நுட்பம் நிறைந்த நகரம். இந்திய ஏரிசக்தி வார நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். சமீபத்தில் சர்வதேச நிதியம், 2023ம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் நிறைந்த நாடாக இருக்கும் என கணிப்பு கூறுகிறது. கொரோனா தொற்று காலத்திலும், இந்தியா உலகளவில் பிரகாசமான இடத்தில் இருந்தது.

21ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய ஆற்றல் வளங்களை உருவாக்குவதிலும், ஆற்றல் மாற்றத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது. எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பெங்களூருவில் பசுமை இயக்க பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாலையில், தும்குரு மாவட்டம் குப்பி தாலுக்கா பிதரஹள்ளி கிராமத்தில் உள்ள இந்துஸ்தான் ஏரோ (எச்.ஏ.எல்) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை ஆகும்.