கோவை கோர்ட் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கோவை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில் கோகுல் என்பவர் இறந்த நிலையில் இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தப்ப முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோகுல் உள்பட 5 பேரை சரவணம்பட்டி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் கோவை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று கோகுல் கையெழுத்திட்டார். நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பிறகு கோகுல் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் அங்கிருந்து புறப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள டீக்கடைக்கு இருவரும் சென்றனர். அப்போது ஒரு கும்பல் இருவரையும் திடீரென்று வழிமறித்து ஆயுதங்களால் தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் ஓடினர். விரட்டி சென்ற கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்து துடிதுடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் கோகுல் இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் தான் கோகுல் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதாவது கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் செல்போன் சிக்னல் கோத்தகிரி பகுதியில் இருப்பது தெரியவந்ததால் அங்கு போலீசார் விரைந்தனர். இதையடுத்து போலீசார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காத்தப்பட்டி பகுதியில் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வேளையில் ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. உதகை-மேட்டுபாளையம் சந்திப்பு பகுதியில் அவர்கள் தப்பி சென்றபோது போலீசார் பாதுகாப்பு கருதி ஜோஸ்வா, கவுதம் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இருவரும் காலில் குண்டு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டு காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.