ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக வெற்றி!

ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெற்றிருக்கிறார்.

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றனர். இதன்மூலம் டெல்லி மாநகராட்சியை முதல்முறை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேயர் நாற்காலி ஆம் ஆத்மிக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவும் போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தியது. அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் மாற்றங்கள் நிகழும் எனக் கூறி பரபரப்பை பற்ற வைத்தது. மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பாஜக சார்பில் ரேகா குப்தா உள்ளிட்டோர் களமிறங்கினர்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி கூடிய மாநகராட்சி கூட்டத்தில் மேயர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என எதிர்பார்த்தால், பதவியேற்பு விஷயத்திலேயே மோதல் வெடித்தது. ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்கள் வாக்குவாதம், தாக்குதல் என கூட்டத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு சென்றது. இதையடுத்து இரண்டு முறை மேயர் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி விஷயம் மிகவும் சீரியசாக மாறியது. குறிப்பாக துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் 10 பேர் மேயர் தேர்தலில் வாக்களிக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி நாடியது. அதில், சட்டம் தெளிவாக இருக்கிறது. நியமன உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 22) கூடிய மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தேர்தலுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் டெல்லி மாநகராட்சி மேயர் நாற்காலியை அலங்கரிக்கும் முதல் ஆம் ஆத்மி மேயர் என்ற பெருமையை ஷெல்லி ஓபராய் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மேயராக தேர்வு செய்யப்பட்ட ஷெல்லி ஓபராய்க்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஷெல்லி ஓபராய் பேசுகையில், முதல்வர், துணை முதல்வர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு என்னுடைய நன்றிகள். மாநகராட்சி அவையின் மாண்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சரியான முறையில் நடத்தி செல்வேன். தலைநகரை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதே எங்களின் முதன்மையான குறிக்கோள் எனக் குறிப்பிட்டார்.