குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை செய்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேங்கைவயல் கிராமம், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மற்றும் வேங்கைவயல் கிராம ஊராட்சிமன்ற தலைவர் உட்பட பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மனித கழிவு கலக்கப்பட்ட நீர் ஆய்விற்காக உட்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தற்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.