பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா?: சீமான்!

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்று சொல்கிறார்கள். பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா? என்று சீமான் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டும் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஆதரவு கோரி சீமான் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் கருங்கல் பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர் வாழாத நாடில்லை. ஆனால் தமிழர்கள் வாழ உள்ளங்கை அளவு கூட ஒரு நாடு இல்லை. நம்முடைய இனத்திற்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர் பிரபாகரன். என் மொழி, இனம் வாழ வேண்டும் என்றால் என் தமிழை உயிராக நேசிக்கிற ஒரு தமிழன் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். நாம் இந்த நாட்டை உளமார நேசிக்கிறோம். அவர்கள் ஒப்புக்கு நேசிக்கிறார்கள். இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் இந்த இன மக்களை ஆள வேண்டும் என்று துடிக்கிறார்கள். எல்லோரையும் போல நம் இன மக்கள் வாழ வேண்டும் என்று போராடுகிறோம்.

எனக்கு பதுங்க தெரியும். ஆனால் பயம் தெரியாது என்று தெய்வ திருமகன் முத்துராமலிங்க தேவர் சொல்லியிருக்கிறார். புலி பதுங்குவது பயந்து அல்ல.. பாய்வதற்கு.. எங்களுடைய பொறுமையும் ஒரு போர் தான். நாங்கள் 70 அடி பின்னால் நிற்பது, 71 அடி முன்னோக்கி ஓடுவதற்காக என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் எல்லோருக்கும் நிலையானது இல்லை. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என்று திராவிட கட்சிகள் சும்மா பேசிக்கொண்டு இருக்கின்றன. நாட்டுக்கு கேடான மதுவை எந்த நாடாவது விற்குமா? என்ன கொடுமை இது. இந்த சமூகம் அநீதிகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. லஞ்சம், ஊழல், முறையற்ற நிர்வாகம் எல்லாம் தெரிகிறது.

உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. எங்களுக்கு ஒரே கோட்பாடு தான்.. காங்கிரஸ் என் இனத்தின் எதிரி. பா.ஜ.க. மானுட குலத்தின் எதிரி. இனி ஒரு முறை நீங்கள் இவர்களுக்கு வாக்களித்து தவறு செய்தால் இந்த பூமியை ஒருவராலும் காப்பாற்ற முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். அதை நிறைவேற்றினார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். எடுத்தார்களா? எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்றும் காவல்துறையிடம் கூறினால் மேலே இருந்து உத்தரவு என்கிறார்கள்.
அப்படி யார்தான் மேலே இருக்கிறார்களோ தெரியவில்லை.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்று சொல்கிறார்கள். பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா? சுகாதாரமான குடிநீர், அனைவருக்கும் இலவச கல்வி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கிறோம் எனக்கூறி வாக்குகள் கேட்கிறோம். வாக்காளர்களும் எங்களுக்கு ஒட்டு போடுகிறார்கள். ஆனால், நீங்கள் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள். மக்களின் வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கிறது. ஆனால், அரசியல் வழக்குகளுக்கு உடனுக்கு உடன் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இந்திக்காரர்கள் இன்று இங்கு வந்து வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் ரெயிலில் செல்லும்போது கழிவறைக்கு முன்பு அமர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய குழந்தைகள் கழிவறைக்கு செல்ல முடிவதில்லை. போலீஸ் காரர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை கொடுங்கள். விடுமுறை இல்லாததால் தான் நெருக்கடி, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவலர்கள் எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க. தலைவர்களுக்கு அல்ல. விடுமுறையே இல்லாத ஒரு துறை தான் காவல்துறை. எனக்கு பாதுகாப்பு தர வேண்டாம். என்னை பாதுகாக்க என் தம்பி, தங்கைகள் உள்ளனர். இன வெறி இருக்க வேண்டும். தமிழ் தேசிய இன மக்களை பாதுகாக்க. எனவே நீங்கள் அனைவரும் நம்முடைய வேட்பாளர் மேனகாவுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.