எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கெதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிமுக கூடிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், பொதுக்குழு தேர்தல் முடிவுவை வெளியிடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தேர்தல் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமனும், நத்தம் விசுவநாதனும் பொதுச்செயலாளர் சான்றிதழை ஈபிஎஸ்-க்கு வழங்கினார்கள்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.