தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை: கி.வீரமணி

தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

காரைக்கால் திருநள்ளாறு வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அவருக்கு எடைக்கு எடை ஆப்பிள் பழங்களை கொடுத்து கட்சியினர் வரவேற்றனர். கூட்டத்தின் முடிவில் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்ற மத்திய அரசு தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியில் அச்சிட வேண்டும் என்பது இந்தி மொழி திணிப்புக்கு மேலும் ஒரு உதாரணம். தயிர் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு புரியும். இதில் இந்தி அவசியமில்லை. இந்திக்கு ஒருபோதும் தமிழகத்தில் மட்டுமல்ல புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்காளம், பஞ்சாப் இன்னும் சொல்லப்போனால் கிழக்கு இந்தியாவில் இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கிறது. எவ்வளவு வேகமாக அவர்கள் இந்தியை திணிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் ஆட்சிக்கு குழித்தோண்டி கொள்கிறார்கள் என்று பொருள். இவ்வாறு அவர் கூறினார்.