ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: ஆண்டனி பிளிங்கன்

ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன் பதிவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவில் கசப்பு அதிகரித்து வருகிறது. முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் பிப்ரவரி 20, 2023 அன்று உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது ரஷ்யாவை எரிச்சலூட்டியது. அப்போதிருந்து, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் போர் அதிகரிக்கும் என்று அமெரிக்காவை ரஷ்யா மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.