கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம்: நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரே பாதிப்புகள் குறையத் தொடங்கின. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179இல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வழக்கறிஞர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால் காணொலி மூலம் வழக்குகளில் வாதாடலாம். இது தொடர்பாக தயக்கமின்றி தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்த படி காணொலியில் வாதாடலாம் என்று தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் முடிந்து பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும், நேரடியாக அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சென்ற போதும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. அதன் பின்னர் ஹைபிரிட் முறையில் நேரிலும் விசாரிக்கலாம், ஆன்லைன் மூலமாகவும் விசாரிக்கலாம் என்ற முறை நடைமுறையில் இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வயதானவர்கள் என்பதாலும், சிறிய அறைக்குள் அதிக பேர் இருக்க வேண்டிய சூழல் இருப்பதாலும் இந்த முறை நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஹைபிரிட் முறை அமலாகிறது.