வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். இதற்கு உண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு ஒரு வருடமாக மனது வரவில்லை. தயவு செய்து தமிழக முதலமைச்சர் இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுங்கள். இல்லையேல் என்னுடைய தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இது சமூக நீதிப் பிரச்சனை. ஜாதி பிரச்சனை கிடையாது.

நீங்கள் தானே சொன்னீர்கள் சமூக நீதி என்றால் திமுக என்று. ஒரு வருஷம் ஆகியும் உங்களால் இந்த சமூகநீதி பிரச்னையை தீர்க்க முடியவில்லை. நினைத்துப் பாருங்கள். என்னுடைய தம்பிகள் போராட்டத்துக்கு தயாராகி விட்டார்கள். அப்போது நடந்த போராட்டம் வேறு, இப்போது நடந்தால் வேறு விதமாக நடக்கும். இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும். அதை தவிர்க்க வேண்டும் என்றால், நாங்கள் கேட்கின்ற சமூகநீதி பிரச்சினையை தீர்த்து வையுங்கள். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை கொடுங்கள். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.