தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான தேசிய நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், ஒன்றிய பாஜக அரசின் கடைசி நிதி நிலை அறிக்கை இதுவாகும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அதானி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்கட்சிகள், அதானியின் மோசடி குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதானி விவகாரம் குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை, அதானி என்ற பெயரைக் கூட அவர் உச்சரிக்காதது எதிர்கட்சிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் விவாதத்திற்கான கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் ராகுல் காந்தியின் லண்டன் உரையை பாஜக கையிலெடுத்தது. இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக ராகுல் காந்தி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதேபோல் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதனால் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவே இல்லை.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளிற்கும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து டெல்லி வந்து எம்.பிக்கள் தங்கும் வசதி, உணவு வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படுகின்றன. இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்திலும் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படுகிறது. இந்தநிலையில் அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தி விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் சுமார் 300 கோடிக்கும் மேல் வீணாக வாய்ப்புள்ளது.

இந்தசூழலில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒரு கவிதை எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு அதானிக்காக அமரவே இல்லாமல் முடிந்தது இன்று. நாக்பூர் தலைமையகத்தின் நடைப்பயிற்சி நண்பருக்காக 25 நாட்கள் நாடாளுமன்றம் நடக்காமல் பார்த்துக் கொண்ட “அரசியல் தியாகம்”. அதானிக்காக அந்நிய மண்ணில் அனாமதேய நிறுவனங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லாத பிரதமரின் மௌனம்.. விசாரிக்காதாம் நாடாளுமன்றக் குழு.. ஜனநாயகம் இல்லை என்று வெளி நாட்டில் ராகுல் சொன்னாரென்று.. நாடாளுமன்றத்தில் நாள் தோறும் நிரூபித்தனர். எதிர்க்கட்சிகள் போராடுவது ஜனநாயகத்தை காப்பாற்ற, ஆளும் கட்சியே அவையை முடக்குவது ஜனநாயகத்தை முடக்க. விவாதிக்க அஞ்சிய “மோதானி” களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.