குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 4 தட்டச்சர் தேர்வில் ஒரே மையத்தில் இருந்து அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர டி.என்.பி.எஸ்.சி (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் காலியாகவுள்ள 2,500 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு பெரும் சர்ச்சையானது. ஏனெனில் தென்காசி மாவட்டத்தில் சுமார் 600 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் 450 பேர் தேர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பின.

இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 5, 7 ஆண்டுகளில் ஏதாவது inordinate frequency ஏதாவது ஒரு மையத்தில் கூடுதலாக வந்த வரலாறு இருக்கிறதா? அதேபோல் குரூப் 4, குரூப் 2 ஆகிய எல்லா தேர்வுகளிலும் பகிர்வு, மையமாக எத்தனை எண்ணிக்கை, மாவட்டம், மாவட்டமாக எத்தனை எண்ணிக்கை என்பது கடந்த காலங்களில் வந்ததற்கும், தற்போது வந்ததற்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா அல்லது வேறுபாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு Member Secretary, TNPSC அவர்கள் ஒரு விரிவான விளக்கத்தை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அந்த விளக்கம் வந்த பின்னர் அதற்கான விளக்கம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேர்வர்கள் தங்களுடைய OMR தாள்களை பெற்ற பின்னர் தவறு இருந்தால் புகார் தரலாம். காலி பணியிடங்களை நிரப்பிய பின் OMR தாள்கள் இணையத்தில் பதிவேற்றப்படும். முறைகேடு என புகார் வந்தால் மட்டுமே கவனத்தில் கொள்வோம். ஸ்டெனோ பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு. தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் இருந்து ஸ்டெனோ பணிக்கு 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடு என புகார் வரவில்லை. ஒரு பகுதியில் அதிகமான நபர்கள் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்திற்காக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு.

கடந்த காலங்களிலும் இதுபோன்று ஒரு பகுதியில் தேர்ச்சி அதிகமாக இருந்துள்ளது. அதற்கு உதாரணமாக காஞ்சிபுரம், சங்கரன்கோவில் பகுதிகளை கூறலாம். எனவே குரூப் 4 தட்டச்சர் தேர்வில் சங்கரன்கோவில் பகுதியில் 450 பேர் தேர்ச்சி என்ற தகவலில் எந்தவித முறைகேடும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.