12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 3 வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இருப்பினும், பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வி எண் 47(b) தவறாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. மேலும், அந்த கேள்விக்கான மதிப்பெண்ணை தேர்வுத்துறை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தின் கேள்வி எண் 47(b) க்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.