அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முப்படைகளுக்கும் வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபால் கிருஷ்ணன், வழக்கறிஞர் எம்எல் ஷர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, ஜெபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ”உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், இந்திய விமானப் படைக்கான வீரர்கள் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 3-வது மனு வரும் 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக, விமானப் படைக்கான வீரர்கள் தேர்வில் பங்கேற்றவர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.