செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் சிடி நிர்மல் குமார். இவர் பாஜகவின் மாநில ஐடி பிரிவு தலைவராக இருந்தார். இந்த வேளையில் அவர் ஆளும் திமுக மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த சிடி நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

முன்னதாக நிர்மல் குமார் பாஜக ஐடி விங்க் தலைவராக இருந்தபோது டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். மேலும் இன்டர்வியூவும் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடினார். நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுவதாகவும், தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சிடி நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நிர்மல்குமார் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.