துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

துபாய் அல் ராஸ் பகுதியில் பலமாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகம்மது ரஃபீக் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள். மேலும் கேரளாவை சேர்ந்த மலப்புரம் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி ஆகியோரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் துபாய் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 2 பேரின் உடல்களை விரைவாக தமிழ்நாடு கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.