மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உளவியல் துறை பேராசியராக பணியாற்றி வரும் கருப்பையா. இவர் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர். இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து சமயநல்லூர் மகளிர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்துமாறு டிஐஜி பொன்னி உத்தரவிட்டார். அதன் பேரில், மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டின் முகாந்திரம் இருப்பதாகக் கருதிய போலீசார், பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையாவை கைது செய்தனர். கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.