அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்: மோடி

2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு என்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது. ஆக்கப்பூர்வமான கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் முன்னேறி வருகிறோம். சுதந்திர மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம். உலகளாவிய நன்மை, மக்கள் நலன், அமைதி மற்றும் வளத்திற்காக குவாட் அமைப்பு தொடர்ந்து பணியாற்றும். 2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.