கேரளாவில் ரெயிலில் பயணிகள் எரிக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் ஐ.ஜி. பணியிடை நீக்கம்!

கேரளாவில் கோழிக்கோட்டில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக ஐ.ஜி. விஜயனை பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டார்.

கேரளாவில் கடந்த மாதம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அப்போது உயிருக்கு பயந்து, ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைதான ஷாருக் செய்பிக்கு சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ.வும் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டது, அவரை போலீசார் கேரளாவுக்கு கொண்டு வருவது குறித்த விவரங்கள் உடனுக்குடன் வெளியானது. ரத்தினகிரியில் இருந்து ஷாருக் செய்பியை கேரளாவுக்கு கொண்டு வரும் போது 2 போலீஸ் வாகனத்தில் 2 முறை பழுது ஏற்பட்டது. இதுதொடர்பான படங்களும், விவரங்களும் பத்திரிகைகளில் வெளியானது.

ரகசிய விவரங்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்த கேரள டி.ஜி.பி. அனில்காந்த் உத்தர விட்டார். இதில் கேரள தீவிரவாத தடுப்புப் படை ஐ.ஜி.யாக இருந்த விஜயன்தான் முக்கிய தகவல்கள் வெளியாக காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஐ.ஜி. விஜயன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகும் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளை ஐ.ஜி. விஜயன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் டி.ஜி.பி. அனில்காந்துக்கு தெரியவந்தது. இதையடுத்து ஐ.ஜி. விஜயனை டி.ஜி.பி. அனில்காந்த் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கேரளாவில் ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபரின் தந்தை ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஷாருக் செய்பியுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லியை சேர்ந்த முகம்மது ஷாபி (46), என்பவரின் மகன் முகமது மோனிசை விசாரணைக்காக என்ஐஏ கொச்சிக்கு வரவழைத்தது. இதைத் தொடர்ந்து முகம்மது ஷாபியும், மகன் முகம்மது மோனிசும் நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்தனர். இவர்கள் கொச்சியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அன்று இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முகம்மது ஷாபி ஓட்டல் கழிப்பறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான போட்டோக்களும், விவரங்களும் பத்திரிகைகளில் வெளியானது.