ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இப்போதே அரசு ஈடுபட தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின்போது இரு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முதலில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 24 ஆம் தேதி அங்கு நடைபெற்ற இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்தியா – சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறையை சார்ந்த 350 க்கும் அதிகமான வணிக நிறுவன பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டார். அதேபோல் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்த பின் முதலமைச்சர் முக ஸ்டாலின் மே 25 ஆம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்றார். தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அதேபோல், வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கத்தின் சார்பில், ஜப்பானில் நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும் முக ஸ்டாலின் கலந்துகொண்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஸ்டாலின் தங்கி இருந்தபோது 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ.818 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. மேலும் ரூ.128 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண நிறுவனமான ஓம்ரான், உற்பத்தி தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் 9 நாள் வெளிநாட்டு பயணம் இன்று நிறைவடைவதை அடுத்து, இரவு 10 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார். அவருக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க உள்ளார்கள்.