கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி என்று கூறியுள்ள துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார். கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது:-

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் துரைருகன். தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கும் டிகே சிவகுமாருக்கு நேரில் வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்ததாகவும் இருப்பினும் இந்த அறிக்கையின் மூலம் முதலில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

சிவக்குமார் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் என்றும் துரைமுருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும், அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன் அதுவரை சிவக்குமார் பொறுமை காப்பார் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.