4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பிரசண்டா!

நேபாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை நாளை பிரசண்டா சந்தித்துப் பேசி, இரு தரப்பிலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – நேபாளம் இடையேயான இருதரப்பு உறவில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் ‘பிரசண்டா’வின் இந்தப் பயணம் புதிய வரலாற்றைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக நேபாள பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு பிறகு பிரசண்டா மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக இது அமைந்துள்ளது. புதுடெல்லி விமான நிலையம் வந்த நேபாள பிரதமருக்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்பு அளித்தார்.

இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் அவர் சந்தித்துப் பேசி திட்டமிட்டுள்ளார்.