உக்ரைனில் உள்ள அணையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளன.
உக்ரைன்- ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்பது தெறியாமல் இருநாட்டு வீரர்களும் எப்போதும் உஷார் நிலையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் முக்கியமான டினீப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர். ரஷ்யா வேண்டுமென்றே நிரம்பச் செய்து உடைத்து விட்டதாகவும், பாதிப்பு உள்ளாகும் இடத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. கேமராவின் கழுகுப் பார்வையில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறுவது போன்ற ஆபத்தான புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதை சுட்டிக்காட்டி உக்ரைன், ரஷ்யா நீர்மின் நிலையத்திற்கான அணையை உடைத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளையில் இச்சம்பவத்திற்கு உக்ரைன்தான் பொறுப்பு என ரஷ்யாவும் குற்றம்சாட்டியுள்ளது. கெர்சன் பகுதியின் தலைவர் ஒலெக்சான்டர், டெலிகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தண்ணீர் மோசமான நிலையை இன்னும் ஐந்து மணி நேரத்தில் எட்டும். தற்போது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தும் பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் இடைக்கால உள்துறை மந்திரியின் ஆலோசகராக இருக்கும் ஆண்டோன் ஜெராஷ்சென்கோ, குண்டு வைத்து தகர்த்ததாகவும், இதற்கு பின்னால் ரஷ்யா உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நோவா ககோவ்கா நகர நிர்வாகத் தலைவர் விளாடிமிர் லியோன்டிவ், அணை உடைந்ததாக கூறப்படும் செய்தியை மறுத்துள்ளார். ஆனால், ஒரு செய்தி நிறுவனத்திற்கு, அணை சேதம் அடைந்துள்ளது. அதற்கு உக்ரைன் தாக்குதல்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். கெர்சன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு மக்கள் வீடுகளை இழந்து தவிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஜபோரிஜ்ஜியா அணுஉலை குளிர்விப்பதற்கான நீரை பெறுவதில் சிக்கம் ஏற்படும் எனத் தெரிகிறது. கிரிமியாவின் பெரும்பகுதி பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிகிறது. ஆனால், ரஷ்யா அதிகாரிகள் மோசமான சேதம் அடைய வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
சதர்ன் பேங்க் பகுதியில் இருக்கும் இந்த அணை சோவித் ரஷ்யாவால் 1956-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. 30 மீட்டர் உயரத்திற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். கெர்சன் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒருவேளை வெள்ளம் புகுந்தால் டினீபர் ஆற்றுப் பகுதிகள், ரஷ்யா வைத்துள்ள செதர்ன் பெங்க் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தேசிய பாதுகாப்பு தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், அணு ஆலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சர்வதேச அணு சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா திட்டமிட்டு அணை மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது உக்ரைனின் சதி செயல் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
