வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, அம்மா ஆட்சிக் காலத்தில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது, இரு சக்கர வாகனத்தில் மொத்த விலையில் 8 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டாக பிரித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள வாகனத்திற்கு 10 சதவீதம் சாலை வரி விதிக்கவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள வாகனத்திற்கு 12 சதவீதம் சாலை வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, தற்போது இரண்டு வகையாக உள்ள கார்களுக்கான வரியை நான்காக பிரித்து உயர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். சாதாரண ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.