திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம்: ஜெயக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்குள்ள போக வேண்டியதுதான் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறினார்.

பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காவேரி மருத்துவமனையில் இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தால் திமுக தலைவர்கள் பலர் சிக்குவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பல விஷயங்களை கூறினார். அவர் பேசியதாவது:-

செந்தில் பாலாஜி கைது விவகாரம் சாதாரண விஷயம் அல்ல. இனிதான் இந்த விஷயத்தில் பல அதிரடிகள் அரங்கேறப் போகின்றன. செந்தில் பாலாஜி வாய் திறந்தார்னா திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்கு போயிடுவாங்க. இன்னும் சில நாட்களில் அமைச்சர் பொன்முடியை தூக்கிடுவாங்க. அப்புறம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரை தூக்கப் போறாங்க. அதுக்காகதான் செந்தில் பாலாஜி கைதுக்கு திமுக இப்படி அலறுது.

செந்தில் பாலாஜி என்ன பெரிய தியாகியா.. இல்லைனா அரிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்தவரா? அவர் ஒரு ஃப்ராடு. எதிர்க்கட்சித் தலைவரா ஸ்டாலின் இருந்த போது, செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாரா இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் திமுகவோடு ஏமாற்றுத்தனத்தையும், ஊழல்களையும் பார்த்துட்டுதான் இருக்காங்க. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை அதிமுகவுக்கு மக்கள் கொடுப்பாங்க. அதுக்கு முன்னாடி கூட சில விஷயங்கள் நடக்கலாம். எங்க தலைவர் (எடப்பாடி பழனிசாமி) டெல்லிக்கு போகப்போறாரு. அதனால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் பேசும்போது, திமுக ஊழல் கட்சி. அந்த ஊழல் கட்சி மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். அது ஒரு நல்ல விஷயம். எனவே, சீக்கிரமாக அந்த நடவடிக்கையை எடுங்கள். எல்லோரையும் சிறையில் அடையுங்கள். அதைத்தான் இன்று தமிழகமே எதிர்பார்க்கிறது. அப்போதுதான், தீபாவளி கொண்டாடியதுப் போல மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், அதேநேரத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி, இபிஎஸ் தலைமையில் மலரும். இதுதான் நடக்கும்.

பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் ஆயிரம் கருத்துகளைக் கூறுவார்கள். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல முடியாது. எங்களுடைய கருத்து என்பது தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகதான் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கும். வேறு யாரும் எங்களுக்கு ஒதுக்க முடியாது. நாங்கள்தான் இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.